search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசி ஆலை அதிபர்"

    சங்கரன்கோவில் அருகே அரிசி ஆலை அதிபர்-மனைவியை அரிவாளால் வெட்டி கொள்ளையர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சங்கரன்கோவில்:

    கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 48), ரைஸ்மில் அதிபர். இவரது மனைவி வனிதா (36). ராஜபாளையத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் தனது மனைவியுடன் பைக்கில் சென்றார். பின்னர் நேற்று மாலை மீண்டும் ஊர் திரும்பினர்.

    தம்பதிகள் கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி பகுதியில் வந்த போது, அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் பிரபாகரன் பைக்கை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி வனிதா அணிந்திருந்த செயினை கேட்டனர். உடனடியாக அதனை கொடுத்துள்ளனர். பின்னர் மோதிரம், பிற நகைகளையும் கேட்டனர்.

    இதற்கு தம்பதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கொள்ளையர்கள் அரிவாளால் பிரபாகரன் மற்றும் வனிதாவை வெட்டினர். அப்போது அவ்வழியாக ஒரு பேருந்து வந்தது. இதை பார்த்த கொள்ளையர்கள் நகைகளை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதில் படுகாயமடைந்த கணவன்-மனைவி 2 பேரும் கோவில்பட்டி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதிகளை அரிவாளால் வெட்டி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு நகை கடையில் 3 பேர் சென்றுள்ளனர். அவர்கள் நகை வாங்குவது போல் நடித்து விவரம் கேட்டுள்ளனர். திடீரென கடையில் இருந்த ரூ. 50 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தப்பி ஓடினர். பின்னர் அவர்கள் சிறிது தூரத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

    சம்பவம் நடந்த கடையில் சி.சி.டி.வி. கேமிரா இல்லாததால் கொள்ளையர்களின் உருவங்களை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த கேமிரா காட்சிகளில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த 2 சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒரே பைக்கில் வந்த 3 பேர் என்பதால் இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஓரே கும்பலா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில நாட்களுக்கு முன்பு சூரங்குடி பகுதியில் வீட்டு பூட்டை உடைத்து 30 பவுன் நகையை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.

    சங்கரன் கோவில் பகுதியில் தொடர்ந்து கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    நிலம் வாங்கி தருவதாக கூறி அரிசி ஆலை அதிபரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த திரூப்பூரை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த சிங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவரிடம் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த நில விற்பனை இடைத்தரகர்கள் மூர்த்தி, நடராஜன் ஆகியோர் திருப்பூரில் நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ.1½ கோடியை 2016-ம் ஆண்டு வாங்கினர்.

    இதன் பின்னர் 3 ஏக்கர் நிலத்தை வாங்கி அவர்கள் சண்முகம் பெயரில் பத்திரப்பதிவு செய்யாமல் தங்களது பெயரில் பதிவு செய்துள்ளனர். இதனை அறியாத சண்முகம், நிலத்தின் உரிமையாளரிடம் கேட்டபோது ஏற்கனவே மூர்த்தி, நடராஜன் பெயரில் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த சண்முகம் இதுகுறித்து மூர்த்தி, நடராஜனிடம் கேட்ட போது சரிவர பதில் கூறாமல் கொலை மிரட்டல் விடுத்தனர்.

    ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சண்முகம் இது குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னியிடம் புகார் செய்தார்.

    மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து திருப்பூரில் பதுங்கியிருந்த மூர்த்தியை கைது செய்தனர். தலைமறைவான நடராஜனை தேடி வருகின்றனர்.
    அரிசி ஆலை அதிபர் வீட்டில் மர்ம நபர்கள் 80 பவுன் நகை மற்றும் ரூ.14 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பாளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    பாளை திம்மராஜபுரம் கோட்டூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவர் அப்பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவர் தொழில் வி‌ஷயமாக இன்று காலை வெளியூர் சென்று விட்டார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கோவிலுக்கு சென்றிருந்தனர்.

    அந்த வேளையில் மர்ம நபர்கள் பாண்டி வீட்டிற்குள் மாடி வழியாக ஏறி உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவை உடைத்து அதிலிருந்த 80 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 லட்சம் ரொக்க பணத்தையும் திருடினர். இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம்.

    இன்று காலை வீட்டிற்கு வந்த பாண்டி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி பாளை குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    சம்பவ இடத்திற்கு மாநகர குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லா விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் பாளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×